Monday, August 9, 2010

ஏலம் எடுத்த கதை...

அய்யா வணக்கம். ஞாயமா அய்யோ வணக்கமுன்னு தான் ஆரம்பித்து இருக்க வேணும். ஏன் என்றால் நான் சொல்லப் போகும் கதை அப்படிப்பட்டதுங்க. போன வாரம் பேப்பரில் ஒரு விளம்பரம். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாங்க எங்க பேப்பர் பார்க்கிறோம்? இந்த இணையத்தில் இணைந்ததிலிருந்து பேப்பராவது ஒண்ணாவது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த காகிதத்தை கண்ணுலை பார்த்தாத்தான் பொழுதே விடியுது. அப்படி ஒருபழக்கம் ஏற்பட்டு இருக்குது.

விளம்பரத்துக்கு வருவோம். அரசு அலுவலகம் ஒன்றில் அலுவலர்கள் பயன்படுத்திய வாகனம் ஏலம் விடுவதாகவும், ஏலம் எடுக்க விரும்புவோர்கள் இன்ன தேதியில் இத்தனை மணிக்கு அலுவலகம் வந்து ரூ.5000 பிணையத் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம்...என்ற விளம்பர அறிவிப்பு. இதைப் பார்த்த எனக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் உடனே என்னை அழைத்து, ‘உங்களுக்கு இந்த அலுவலக நடைமுறை ஓரளவு தெரியுமே, நீங்கள் ஏலத்தன்று சென்று பிணைய தொகை கட்டி எப்படியாவது அந்த வாகனத்தை ஏலத்தில் இன்ன விலைக்கு தோதா வந்தா எடுத்து வாருங்கள்’ எனக்கூறினார்.
நானும் ஆகா!! நம்மையும் நம்பி இப்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாரே!! வேலை இல்லாதற்கு இது ஒரு நல்ல வேலைதான் என்று எண்ணிக் கொண்டு ஏலத்தன்று ஜம்மென்று புறப்பட்டேன்.

நம்ம பிரமுகரும் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தார்.

‘அய்யா வணக்கம். வண்டியை போயி பார்த்திர்களா?’

‘ஆமாங்க...நல்ல நெம்பர்.. இன்ன விலைக்கு வந்தா எடுக்கலாம்.. நம்ம வாகன ஓட்டியை அனுப்பி வண்டியை பார்த்து விட்டேன்’ என்றார். ‘இன்ன விலைக்கு வந்தா எடுங்க’ என தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி..தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பினார். துணைக்கு தொழில்நுட்ப பணியாளர் வாகன ஓட்டுனர். அலுவலகம் சென்றோம்.

நல்ல நேரம் பார்த்து முன் பிணைய தொகை ரூ.5000 செலுத்தி காத்திருந்தோம். ஏல நேரம் மதியம் மணி 3.00. சரியாக மணி 2.40. ஏலம் நடக்கும் அறை முன்பு கூட்டம் கூடியது. நாங்களும் சென்றோம். அப்போது ஒருவர் கூறினார்..EMT (முன் வைப்பு தொகை) செலுத்தியவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்..எனக்கூறினார். அப்போது தான் தெரிந்தது என்னையும் சேர்த்து 22 நபர்கள் EMT கட்டியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் கூறினார்...‘எல்லோரும் நல்லா கவனிங்க, ஏலம் கேட்டு கவர்மெண்டுக்கு வீணாக காசை கட்டுவதற்கு EMT கட்டியவர்களுக்கு ஆளுக்கு ரூ.1500 தருகிறேன் எல்லோரும் வாங்கி கொண்டு சென்று விடுங்கள்’ என்று.. நானும் கூறினேன்..நான் வேணும்ன்னா ஆளுக்கு ரூ. 1500 தருகிறேன் எனக்கூறினேன். அதில் இன்னொருவர் கூறினார் நான் ஆளுக்கு ரூ.2000ஆக தருகிறேன்... என்று. இதெல்லாம் முடியாது. ஏலமே கூறிக்கொள்ளலாம்..எனக்கூறிக்கொண்டு ஏல அரங்குக்குள் சென்றோம்.

அப்போது உடன்பிறப்பு சீருடையில் நானும் பணம் கட்டியுள்ளேன் என உடன்பிறப்பு வந்தார். ஆளுக்கு ரூ.2500 தருகிறேன் பேசாம வாங்கிட்டு நடையை கட்டுங்க..மீறி ஏலம் கூறினா..என்ன நடக்கும்.. அப்படிங்கிறதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் என அறிவித்தார். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு ரூ.2500 வாங்கி கொண்டு உடன்பிறப்பை தன் ‘உடன்பிறப்பா’ எண்ணி ‘வாழ்த்தி’ச் சென்றார்கள். நாம ஒரு கணக்கு போட்டோம். வாகனத்திற்கு அரசு விலை ரூ.37000.. அதனுடன் ரூ.1000 சேர்த்து ரூ.38 ஆயிரம் அலுவலகத்தில் செலுத்த வேண்டுமாம்.

உடன்பிறப்பையும் சேர்த்து 22 ல் ஒண்ணு போக 21க்கு தலா ரூ.2500..மொத்தம் ரூ.52500.. அலுவலகச் செலவு ரூ.10000 என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாம். அதையும் சேர்த்து 38+52500+10 ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஐநூறு. நம்ம இலக்கு மீறி போனதாலும், உடன்பிறப்பின் மேல் உள்ள பாசத்தினாலும் (பயம் என நினைத்து உடன்பிறப்பின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல) ரூ.2500 அன்புடன் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

அய்யா நம்ம கதையில் வந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே..உண்மையை தவிர வேறில்லை.. அரசின் மானம் மரியாதை கருதி அலுவகத்தின் பெயர் பதிய படவில்லை. கொள்முதல் ரூ.5000 லாபம் ரூ.2500.. அலுவலகத்தை பார்த்து நின்னு ஒரு ராயல் சல்யூட் அடித்து விட்டு வந்தேன். ரூ.5000 மூலதனத்தில் மூன்று மணிநேரத்தில் ரூ.2500 லாபம். நல்ல வேலையா இருக்குதுல்ல..

அடுத்து வாகன ஏலமின்னு பத்திரிக்கையில் வந்தா சொல்லி அனுப்புகிறேன். மறக்காம வாங்க..எல்லோரும் சேர்ந்து கவர்மெண்டை வாழ வைப்போம்ங்க..